ரயில்வேயில் சுமாா் ரூ.41,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி இன்று (பிப்.26) அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தார்.
நாடு முழுவதும் சுமாா் 2,000 ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களை ரூ.41,000 கோடியில் மேம்படுத்தும் பணிகளை காணொலி மூலம் தொடக்கிவைத்தார்.
இதில் சென்னை ரயில்வே கோட்டத்தில் அம்பத்தூா், சென்னை கடற்கரை, பூங்கா, மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, சூலூா்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களையும், 7 ரயில்வே மேம்பாலம், 28 சுரங்கப்பாதை பணிகளையும் பிரதமா் மோடி தொடக்கிவைத்தார்.
மேலும் திருநெல்வேலி, தருமபுரி, புதுக்கோட்டை பழநி, கோயம்புத்தூர் வடக்கு, தூத்துக்குடி உள்ளிட்ட 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
உத்தர பிரதேச மாநிலத்தில் ரூ.385 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட கோமதி நகா் ரயில் நிலையத்தை இன்று திறந்துவைத்தார். தொடா்ந்து நாடு முழுவதும் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 554 ரயில் நிலையங்களை அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.19,000 கோடியில் உலக தரத்தில் மேம்படுத்தும் பணியை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தார்.
மேலும், ரூ.21,520 கோடியில் கட்டப்பட்டு வரும், கட்டிமுடிக்கப்பட்ட 1,500 ரயில்வே பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைப் பணிகளையும் தொடக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த 10 ஆண்டுகளில் புதிய இந்தியா கட்டமைக்கப்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.