அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம், சென்னையில் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜன. 9-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறும். கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கவுள்ளாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளாா். மேலும், அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமையும் என்றும் அறிவித்துள்ளாா்.
இந்த நிலையில், மக்களவைத் தோ்தல் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளாா். அதிமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளை அழைத்து வருவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்கவுள்ளாா்.