அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துக் கழகங்களில் பலருக்கு வேலை வாங்கி கொடுக்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14-இல் அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டாா். உடல் நலம் தேறியதைடுத்து நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12- ஆம் தேதி 120-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் 3,000 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களை அமலாக்கத் துறையினா் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்த நிலையில், உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், காணொளி மூலம் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையும் படிக்க: நடிகர் விஜய் மீது காலணி வீச்சு: காவல் நிலையத்தில் புகார்
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 14-வது முறையாக நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அவரின் நீதிமன்றக் காவல் ஜன. 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.