கரூர்: கரூரில் பிளஸ் 2 மாணவி முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வெண்ணைமலை பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் தம்பிராஜ். இவர் கூலித் தொழிலாளி. இவரது மகள் கார்த்திகா (17). இவர் கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவி கார்த்திகா பிற்பகல் இடைவேளையில் மதிப்பெண் பேப்பரை வாங்கி செல்வதற்காக முதல் மாடியில் உள்ள ஆசிரியை சந்திக்கச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, திடீரென முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனைக் கண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உடனே மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் மாடியில் இருந்து கீழே விழுந்ததால் மாணவிக்கு கால், கை மற்றும் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கரூர் நகர காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவி அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் சக மாணவிகள் அவரிடம் பழகாமல் இருந்ததாகவும், இதனால் விரத்தியில் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].