அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி, பொங்கல் பரிசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் இந்த நடைமுறைக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

05.01.2024 அன்று முதல்வரின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள செய்தி வெளியீடு எண். 27 இல், “பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடிட, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாய விலை கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திமுக அரசின் இந்த நடவடிக்கை நடுவு நிலைமைக்கு எதிரான செயலாகும்.

பழைய ஓய்வூதிய திட்டம், விடுப்பினை சரண் செய்து பணமாக்குதல் என பல்வேறு சலுகைகளை அரசு ஊழியர்களும், பொதுத்துறை ஊழியர்களும் இழந்து இருக்கிறார்கள். அகவிலைப்படி உயர்வு தாமதமாக வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக கூடுதல் பணி சுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு பொங்கல் பரிசு இல்லை என்று கூறுவது எவ்விதத்தில் நியாயம்? வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் தங்களின் வருமானத்திற்கு ஏற்ப வருமான வரி செலுத்துகிறார்கள். அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதே வருமான வரி உள்ளிட்ட பல வரிகளின் மூலம் தான். உண்மை நிலை இவ்வாறிருக்க, அரசு திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு அதன் பயனை அளிக்காதது கடும் கண்டனத்திற்குரியது. 

பெரிய, பெரிய தொழிலதிபர்களை தவிர்த்து வருமான வரி செலுத்தும் பெரும்பாலானோர் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான். கல்வி கடன், வீட்டு கடன், நகை கடன், வாகன கடன் என பல கடன்களை வாங்கி சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு என பல நிதிச் சுமைகளை தாங்கி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருளில்லா அட்டைதாரர்களின் நிலைமையும் இதேதான்.. இவர்கள் எல்லாம் பாவப்பட்டவர்களா? இவர்கள் எல்லாம் மக்கள் இல்லையா? இவர்கள் எல்லாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டாமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன.

எல்லா திட்டங்களுக்கும் நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதுபோல், பொங்கல் பரிசு வழங்குவதிலும் நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து இருப்பது மக்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது. இருக்கின்ற சலுகைகளை பறிக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.

நடைமுறையில் இருக்கின்ற, சலுகைகளை அனுபவிக்கும் வகையிலும், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை  அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கிலும், ரூபாய் 1,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிட முதல்வர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com