உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்றும், நாளையும் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது.
இந்த மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
மாநாட்டில் பங்கேற்க, 30,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். மாநாட்டை முன்னிட்டு மொத்தம் 26 அமர்வுகளில் 170க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பேசவுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக தொழில்துறை செயலர் அருண் ராய் கூறுகையில், மாநாட்டில் 5.5 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பது என்ற இலக்கு முதல் நாளிலேயே எட்டப்பட்டது. இன்று (ஜன. 7) மட்டும் 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடானது, இரு நாள்களின் முடிவில் சுமார் ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடுகள் வரை ஈர்க்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இந்த மாநாடு இன்று தொடங்கப்பட்டது. ஆனால், முதல் நாளிலேயே இலக்கு எட்டப்பட்டது.
ஹுண்டாய், ஓலா, கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்கவும் அதனை விரிவுபடுத்தவும் முதலீடுகளை வழங்கின.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்கள் கவனம் ஈர்க்கும் வகையிலான முதலீட்டை அறிவித்தன. அதில், அதிகம் கவனம் ஈர்த்தது வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ரூ.16000 கோடி முதலீடு. இந்நிறுவனம் தூத்துக்குடியில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மையத்தை தொடங்கவுள்ளது.