சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வருகை தரவுள்ள நிலையில், அலுவலக வளாகத்தில் மாநகரப் போலீஸ் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசின் அனுமதியின்றி தனியார் நிறுவனம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
மேலும், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ் ராம், கணேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஏழு இடங்களில் கடந்த டிசம்பர் 28-ம் தேதி 21 மணி நேரத்துக்கு மேலாக போலீசார் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழகத்துக்கு இன்று மதியம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தரவுள்ளார்.
இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் 5 இடங்களில் சேலம் மாநகர காவல் துறையினர் இன்று காலை மீண்டும் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
மேலும், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள துணை வேந்தரை ஆளுநர் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே மாணவர் அணியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பல்கலைக்கழகம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.