பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கையில் போதுமான அளவுக்கு ரொக்கம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கிகள் மட்டுமே விடுமுறை என்றாலும், வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன், பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகைகள் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு தொடர்ச்சியாக ஐந்து நாள்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால், ஏடிஎம்களில் ரொக்கம் இல்லாமல் காலியாகும் நிலை ஏற்பட்டிருப்பதால், பொதுமக்கள் ஐந்து நாள்களுக்கு தேவையான ரொக்கம் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம் என்று கூறப்படுகிறது. எனினும், தற்போது மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் வங்கிச் சேவைகள் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும் நம்பப்படுகிறது.
கையில் இருக்கும் ரொக்கத்துக்கு ஏற்ப மக்கள் தங்களின் செலவை திட்டுமிட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோல, மீண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினமும், அதற்கடுத்த நாள் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.