சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையில் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூர் அணையில் ஓய்வுபெற்ற துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் 34 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேட்டூர் அணை பூங்காவில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வந்தனர். இவர்கள் காவிரியில் நீராடி விட்டு, அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பூங்காவிற்கு சென்றனர்.
இதனிடையே சேலத்தில் இருந்து உதவி ஆய்வாளர் ஜெய்சிங் தலைமையில் 4 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் குழு மேட்டூர் அணைக்கு வந்தனர். இவர்கள் மோப்பநாய் தாரணி மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு மேட்டூர் அணையில் சோதனை செய்தனர்.
அணையின் நுழைவு பகுதி, வலது கரை, இடது கரை, கீழ்மட்ட மதகு, மேல்மட்ட மதகு, பவளவிழா கோபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை செய்தனர். இது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் கூறுகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடைபெறும் வழக்கமான சோதனை என்றனர். சோதனையில் எந்த ஒரு பொருளும் கைப்பற்றப்படவில்லை என தகவல் அளித்துள்ளனர்.
இன்று காணும் பொங்கல் பண்டிகை என்பதால், மேட்டூர் அணைப் பகுதிக்கு ஏராளமானோர் சுற்றுலா வந்திருந்தனர். இந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்களின் திடீர் சோதனையால் மேட்டூர் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.