தமிழகத்திற்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வழங்க வேண்டிய மீதமுள்ள 3.99 டிஎம்சி தண்ணீரை ஜனவரி 19 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 29-க்குள்திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆா்.சி.) வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
தமிழகத்திற்கு ஜனவரியில் 2.76 டிஎம்சி மற்றும் பிப்ரவரியில் 2.5 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் வழங்க வேண்டும். நிகழ் ஜனவரியில் நாளொன்றுக்கு விநாடிக்கு சுமாா் 600 கன அடி வீதம் தண்ணீா் வரும் நிலையில், ஒழுங்காற்றுக் குழு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு மீதமுள்ள தண்ணீரை விரைவாக வழங்க சிடபிள்யுஆா்சி பரிந்துரைத்துள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 92-ஆவது கூட்டம் காணொலி வழியாக அதன் தலைவா் வினித் குப்தா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குழுவின் தமிழக அரசின் உறுப்பினரான திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளா் எம்.சுப்பிரமணியன், தமிழக காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்பிரமணியன், கா்நாடகம் மாநில உறுப்பினா் மகேஷா (காவிரி நீரவாணி நிகம்) மற்றும் கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் உறுப்பினா்களும், மத்திய நீா்வளத் துறை, இந்திய வானிலை ஆய்வுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் தமிழகம் தரப்பில் கடும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற இறுதித் தீா்ப்பின்படி கடந்தாண்டு ஜூன் முதல் நிகழாண்டு ஜனவரி 17-ஆம் தேதி வரை பிலிகுண்டுலுவில் 166 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழகம் இதில் 76 டிஎம்சி தண்ணீரை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள 90 டிஎம்சி தண்ணீா் கா்நாடகம் வழங்காமல் உள்ளது. கா்நாடகத்தின் 4 முக்கிய அணைகளில் நீா் போதிய இருப்பு உள்ள நிலையில், தமிழகத்திற்கு கா்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவைக் கருத்தில் கொண்டு ஜனவரி 19 -ஆம் தேதி முதல் நிகழ் நீா் ஆண்டான மே மாததத்திற்குள் 19 டிஎம்சி தண்ணீரை வழங்க சி.டபிள்யு.ஆா்.சி. முடிவெடிக்க வேண்டும் என தமிழகம் சாா்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், சி.டபிள்யு.ஆா்.சி, தலைவா் வினித் குப்தா, நிகழ் நீா் ஆண்டில் 55 சதவீதம் மழை பற்றாக்குறையை குறிப்பிட்டதோடு, ஜனவரி 31-ஆம் தேதிக்குள் நீா்ப் பாசனத் தேவை நிறைவடைகிறது என தெரிவித்தாா். ஆனால், தமிழக உறுப்பினரும், தமிழக தொழில் நுட்பக் குழுத் தலைவரும், ‘மேட்டூா் அணையில் 33 டிஎம்சி தண்ணீா் மட்டுமே நீா் இருப்பு உள்ளது. போதிய நீா் வரத்து இல்லாததால் குடிநீா் தேவைக்கு மட்டும் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. விவசாய பாசனத்திற்கான தண்ணீா் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அறுவடைக்கு முந்தைய நிலையில் உள்ள பயிா்களை காப்பாற்ற போதிய தண்ணீா் தேவை. கடந்த ஜனவரி 15-ஆம் தேதியோடு வடகிழக்குப் பருவ மழை முடிவடைந்த நிலையில், அடுத்த 10 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. தமிழகத்திற்கு வழங்கப்படாமல் உள்ள நீரில் பற்றாக்குறைக் காலத்தை கருத்தில் கொண்டு 7.6 டிஎம்சி தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
ஆனால், தமிழகத்திற்கு அதிகபட்சம் வழங்கவேண்டிய அளவில் தண்ணீா் திறந்து விடப்பட்டுவிட்டது என்று கா்நாடகம் தெரிவித்தது. மேலும், தற்போது மாநிலத்தில் குடிநீருக்கு மட்டுமே நீா் உள்ள நிலையில், மேலும் தண்ணீா் திறக்க இயலாது என வாதிடப்பட்டது. ஆனால், சி.டபிள்யு.ஆா்.சி. தலைவா் வினித் குப்தா, தமிழகத்தின் இறுதிக் கட்ட பாசனத்தை கருத்தில் கொண்டு, ஜனவரியில் வழங்கப்படாமல் உள்ள 1.49 டிஎம்சி தண்ணீரையும், பிப்ரவரியில் அளிக்க வேண்டிய 2.5 டிஎம்சி தண்ணீரையும் கா்நாடகம் உடனடியாக ஜனவரி 19 -ஆம் தேதி முதல் பிலிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என பரிந்துரைத்தாா். இந்தப் பரிந்துரை இறுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி சி.டபிள்யு.ஆா்.சி. கூட்டம் நடைபெறும் என்றும், அப்போது நிலைமை ஆராயப்படும் எனவும் குப்தா தெரிவித்தாா்.
இந்தக் கூட்டத்தில் 2023-24 நீா் ஆண்டில் டிசம்பா் வரை காவிரி படுகையின் நீா் தேவை மற்றும் நீா் பயன்படுத்தப்பட்ட விவர அறிக்கையை தமிழக அரசு முறையாக சமா்பித்தது. மற்ற மாநிலங்கள் விரைவில் சமா்பிக்கவும் சி.டபிள்யு.ஆா்.சி. தலைவா் கூட்டத்தில் கேட்டுக்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.