ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தமிழகத்தில் விடுமுறை அறிவிக்க வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டும்
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தமிழகத்தில் விடுமுறை அறிவிக்க வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்



கோவை: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தினார். 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை விழா ஜன. 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் ஜன.22 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.பல்வேறு மாநிலங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

ஏற்கெனவே அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை அமைப்புகளுக்கு பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தினார். 

கோவை கெம்பட்டி காலனி பகுதியில் சுவற்றில் பாஜக சின்னம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது ஐந்து இடத்திலாவது பாஜகவின்  தாமரை சின்னத்தை வரைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து கட்சி நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் வரைந்து வருகின்றனர்.

கோவை தெற்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற வகையில் இன்று இந்த பணிகளை துவக்கி வைத்துள்ளேன். தமிழகத்தில் இன்றும் நாளையும் பல்வேறு கோயில்களில் பிரதமர் வழிபாடு செய்கிறார். ராமருக்கும் தமிழகத்திற்கும் பாரம்பரியம் மிக்க,கலாசார ரீதியான இணைப்பு உள்ளது . இங்கு வழிபாடு செய்து அயோத்திக்கு பிரதமர் செல்வது தமிழகத்திற்கு பெருமை அளிப்பதாகும் என கூறினார். அரசு நிகழ்ச்சிகளில் பிரதமரும் முதல்வரும் கலந்துகொள்வது இயல்புதான்.அதை கூட்டணி என பார்க்க முடியாது என்றார்.

மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான தொகையை உடனடியாக பிரதமர் கொடுத்துள்ளதாகவும்,தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி, கொடுக்க வேண்டிய அக்கறை இவை இரண்டையும் பிரதமர் கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும் ராமர் கோவில் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு குழு அமைக்கப்பட்டு அந்த குழு தான் உரிய பணிகளை செய்தது. அனைத்தையும் தேர்தலோடு தொடர்பு படுத்த முடியாது என்றார். நாட்டில் எப்போதும் ஏதாவதொரு தேர்தல் நடந்து கொண்டு தான் இருக்கும் என தெரிவித்தார். 

மேலும் ராமர் கும்பாபிஷேக விழாவிற்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை அளிப்பது போல தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திமுக பேரவை உறுப்பினர் மகன் வீட்டில் பட்டியல் இனப்பெண் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் தண்டனையில் இருந்து தப்பித்து விடாமல் அவர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com