சென்னை: பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் இடையூறு இருக்கக் கூடாது என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு இன்று (ஜன. 24) காலை தொடங்கி இருநாள்கள் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கின் முதல் நாளில் ‘மாநில பல்கலைக்கழகங்களில் வேந்தர்களின் பங்கு’ என்ற தலைப்பில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பங்கேற்று உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் பேசியதாவது:
அரேபிய வரலாற்றாசிரியர்கள் இந்தியாவுக்கான வரலாற்று தொகுப்புகளை எழுதியுள்ளனர். அறிவு மற்றும் ஞானத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே அறியப்பட்டது இந்திய நாகரீகம்.
கல்வி அறிவைப் பெறுவதுடன் அதனை மற்றவர்களுக்கு பகிர்வது மிகவும் முக்கியம். நாம் கற்பதை முழுமனதுடன் உள்வாங்க வேண்டும், அதன்மூலம் மற்றவர்களுக்கு கற்பிப்பதில் அது வெளிப்படும்.
உங்கள் முதல் பிறப்பு பெற்றோரிடம் இருக்கலாம். ஆனால், இரண்டாவது பிறப்பு ஆசிரியர்களிடம்தான் நடக்கிறது.
வெளிநாட்டில் இருந்து வந்து நமது கலாசாராத்தை பலர் கற்கின்றனர். வரலாறு மற்றும் கலாசாரத்தை கற்றுக் கொடுக்க நம்மிடம் தலைசிறந்த ஆசிரியர்கள் உள்ளனர்.
பல்கலைக்கழகங்களின் சுயாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். இதை உறுதி செய்வதற்கான ஒரே வழி துணை வேந்தரின் நியமனத்தில் இடையூறு இருக்கக் கூடாது.
பழைய ஜனநாயக முறையைக் கொண்ட கிரேக்க சிந்தனை அடிப்படையிலான நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. நமது கலாசாரம் முற்றிலும் வேறுபட்டது. பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டது.” எனத் தெரிவித்தார்.