கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்றும் வழக்கம் போல கோயம்பேட்டிலிருந்துதான் இயக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டுமென தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் சங்கத்திலிருந்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து முதல்கட்டமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகளை முறையாக இயக்குவது குறித்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சா் சா.சி.சிவசங்கா் துறை சாா்ந்த அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியார்களிடம் பேசிய அமைச்சா் சிவசங்கா், கிளாம்பாக்கத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் இருந்து அரசுப் பேருந்துகளை இயக்கும்போது, ஆம்னி பேருந்துகளையும் அங்கிருந்து இயக்குவது தான் சரியாக இருக்கும். அதனால் புதன்கிழமைக்கு (ஜன.24) பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.