அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, வெள்ளிக் கிழமை மாவட்ட முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் விளங்குகிறது.
இக்கோயில் மகா கும்பாபிஷேக விழா பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது.
குடமுழுக்கு விழாவையொட்டி, உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கை ஏற்ற ஆட்சியர், மாவட்டம் முழுதும் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்து கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார்.
மேலும், பிப்ரவரி 3ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள், அனைத்து தரப்பினரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.