காஞ்சிபுரம்: இரு காவல் ஆய்வாளர்களை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் கிராமத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு எரிந்த நிலையில் எலும்புக் கூடு ஒன்று காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்ததில் இறந்து போனவர் 17 வயதுடைய திருநங்கை சின்னராசு என்பதும் தெரிய வந்தது. முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு 6 பேரை கைது செய்து அவர்கள் உடலை மறைப்பதற்காக எரித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணையும் காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் கொலை செய்து இறந்தவர் 17 வயது என காவல்துறை சார்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரிக்க முடியாது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இவ்வழக்கு போக்சோ நீதிமன்றத்திற்கு தான் மாற்றப்பட வேண்டும். காஞ்சிபுரத்தில் போக்சோ நீதிமன்றம் இல்லை. மேலும் இவ்வழக்கு தொடர்பான காவல்துறை ஆய்வாளர்களான நடராஜன் மற்றும் விநாயகம் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்த காரணத்தால் வழக்கானது செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாமல் தொடர்ந்து கொலை வழக்காகவே இருந்து வருகிறது.
வழக்கை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றாமல் இருந்து வருவது, இவ்வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை பதிவு செய்யாதது, வழக்கை போக்சோ வழக்காக பதிவு செய்யாமல் கொலை வழக்காக பதிவு செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக காவல் ஆய்வாளர்களான நடராஜன், விநாயகம் ஆகிய இருவரையும் 6 பேருடன் சேர்த்து, மேலும் குற்றவாளிகள் பட்டியலில் 8 பேராக இணைத்து உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கினை விரைவாக செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றுமாறும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.