வடக்கு இந்தியா, தென்னிந்தியா இடையேயான பிளவு அரசியல் தலைவர்களின் தோல்வி இல்லை, இந்திய ஒன்றிய கட்டமைப்பின் பிரச்னை என்று விஞ்ஞானி நீலகண்டன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தென்னிந்தியா குறித்து வரலாற்றாளர் வெங்கடாசலபதி மற்றும் விஞ்ஞானி நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
வரலாற்றாளர் வெங்கடாசலபதி பேசியது:
வடக்கு இந்தியாவை போலல்லாமல், தென்னிந்திய கோயில்கள் சமூக நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள கோயில்கள் 800 முதல் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் பொருளாதார பரிணாமங்களை கொண்டதாக செயல்பட்டு வருகின்றன.
திரைத்துறையை பொறுத்தவரை தெற்குக்கும் வடக்குக்கும் வேறுபாடு உள்ளது. பாலிவுட் படங்கள் வசூல் சாதனை நோக்கம் கொண்டவையாக உள்ளது. ஆனால், தென்னிந்திய படங்களில் பிராந்திய சூழல் வேரூன்றி அடித்தளமாக உள்ளது. இது, படத்தின் வசூலை குறைக்கிறது.
விஞ்ஞானி நீலகண்டன் பேசியது:
“உலகின் பல்வேறு பகுதிகளிலும் மொழி சார்ந்த பிரச்னையும், மொழித் திணிப்பை எதிர்க்கும் மக்களும் உள்ளனர். தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் மதத்தின் அடிப்படையிலான அரசியல் குறைவு.
வடக்கு இந்தியா, தென்னிந்தியா என்ற பிரச்னை அரசியல் தலைவர்களின் தோல்வியல்ல, நமது இந்திய ஒன்றியத்தில் உள்ள கட்டமைப்பு பிரச்னை.” எனத் தெரிவித்தார்.