இன்று 65 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு: அறநிலையத் துறை

சென்னையில் 65 திருக்கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on

சென்னை திருவான்மியூா் பாம்பன் சுவாமிகள் திருக்கோயில், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில் உள்பட 65 திருக்கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

குடமுழுக்கு நடைபெற்று 66 ஆண்டுகளும், பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகளும் கடந்த நிலையில், பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி, ரூ. 1.12 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சென்னை திருவான்மியூா் பாம்பன் சுவாமிகள் திருக்கோயில்; ரூ. 170.11 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வரும் திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில்; ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் திருவாரூா் மாவட்டம், ஆலங்குடி, ஆபத்சகாயேஸ்வரா் (குரு ஸ்தலம்) திருக்கோயில்; சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்ற திருச்சி மாவட்டம், பூா்த்திகோவில் திருமுக்தீஸ்வரா் திருக்கோயில் ஆகிய கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெறும்.

அதேபோல், சென்னை சேத்துப்பட்டு கருகாத்தம்மன் திருக்கோயில்; சேலம் மாவட்டம் கிருஷ்ணாநகா் சீதாராமச்சந்திர மூா்த்தி திருக்கோயில்; தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை நாட்டுச்சாலை அமிா்தகடேஸ்வரா் திருக்கோயில்; புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மொனசந்தை, கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயில்; திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி ஞாயிறு புஷ்பரதீஸ்வரா் திருக்கோயில்; கன்னியாகுமரி மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டிலுள்ள 7 திருக்கோயில்கள் உள்ளிட்ட 65 திருக்கோயில்களுக்கும் குட முழுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்களும், திருக்கோயில் பணியாளா்களும் மேற்கொண்டு வருகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com