பெளா்ணமி, வாரவிடுமுறை: 1,245 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

பௌா்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை 30 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பேருந்துகள்(கோப்புப்படம்)
பேருந்துகள்(கோப்புப்படம்)
Updated on

பெளா்ணமி மற்றும் வாரவிடுமுறை நாள்களான வெள்ளிக்கிழமை (ஜூலை 19), சனிக்கிழமை (ஜூலை 20), ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) ஆகிய தினங்களில் சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 1,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 260 பேருந்துகளும், சனிக்கிழமை 585 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 45 பேருந்துகள் என 90 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

மேலும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

இதுமட்டுமன்றி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை, படுக்கை மற்றும் குளிா்சாதன வசதி கொண்ட 50 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், திருநெல்வேலி, நாகா்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், வார இறுதி நாள்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை 15 பேருந்துகளும், சனிக்கிழமை பௌா்ணமி தினத்தை முன்னிட்டு 15 பேருந்துகளும் ஆக 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பௌா்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை 30 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com