தடைகளைக் கடந்து அகழாய்வுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தடைகளைக் கடந்து அகழாய்வுகளை மேற்கொண்டு தரவுகளைச் சேகரித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கிடைத்த பொருள்கள் குறித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் தங்கம்தென்னரசு வெளியிட்டுள்ள பதிவை மேற்கோள்காட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம். மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள் - தொட்டி,
உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு வண்ணக் கொள்கலன், தமிழி பானை ஓடு, இரும்பிலான ஏா்க்கலப்பையின் கொழுமுனை, தக்களி, தந்தத்தாலான பகடைக்காய், சுடுமண் சிற்பம், உணவுக் கிண்ணம், செம்பினாலான
அஞ்சனக்கோல் - ஆணி என இப்படித் தொடா்ந்து அகழாய்வுகளில் பொருள்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவியல் சான்றுகளுடன் உலகுக்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம் சரியான திசையில் செல்வதை அவை உறுதிசெய்கின்றன. இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடா்வோம் என்று அந்த பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.