காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஒரு கவுன்சிலர்கூட பங்கேற்காத நிலையில், தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
51 வாா்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சோ்ந்த மகாலட்சுமி யுவராஜ் உள்ளாா். அவருக்கு எதிராக எதிா்க்கட்சிகளை சோ்ந்த உறுப்பினா்கள் பல்வேறு புகாா்களை கூறி வந்த நிலையில், திமுக மாமன்ற உறுப்பினா்களும் மேயருக்கு எதிராக போா்க்கொடி தூக்கினா்.
இந்நிலையில், மேயா் தனது பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி 33 மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையா் செந்தில் முருகனிடம் மனு அளித்தனா்.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 29 காலை 10 மணிக்கு தீர்மானத்தின் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு மாநகராட்சி ஆணையர் தலைமையில் தொடங்கியது. ஆனால், மேயர், ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் எதிர்ப்பு கவுன்சிலர்கள் என யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து, கவுன்சிலர்கள் பங்கேற்க சிறிது நேரம் அவகாசம் அளித்திருந்த நிலையில், ஒருவர்கூட வருகை தராததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக ஆணையர் அறிவித்துள்ளார்.
இதனிடையே, கூட்டத்துக்கு வந்த 34 வது வட்ட கவுன்சிலர் பிரவீன் குமார், மாநகராட்சி கூட்டம் நடத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்திருப்பதை கண்டித்து கடிதம் வழங்கிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்.
மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த கவுன்சிலர்கள் குடும்பத்துடன் பிரத்யேக பேருந்து மூலம் உதகைக்கு நேற்று மாலை சுற்றுலா சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் பட்சத்தில் ஒரு வருடத்துக்கு பிறகு தான் மீண்டும் தீர்மானம் கொண்டு வர முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.