
விழுப்புரம்: விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலர் பிரஜேந்திர நவநீத் புதன்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப் பட்டது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்ட நிலையில், மற்ற 7 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த 67 பேரில் இதுவரை 44 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 28 பேர் அரசுத் தரப்புக்கு பாதகமாகக் கூறி பிறழ் சாட்சியமளித்துள்ளனர். புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது கோபிநாதன், சதானந்தம், ஜெயச்சந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, பொன்.கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய மூவரும் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பின் 45-ஆவது சாட்சியாக அப்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவரும், தற்போது வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலராகப் பணியாற்றி வரும் பிரஜேந்திர நவநீத் விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியமளித்தார்.
இதை முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா பதிவு செய்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.