
அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அதிமுக கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க தியாகத்திற்கு ஆயத்தமாவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக புதன்கிழமை அறிக்கை வெளியிட்ட சசிகலா கூறியதாவது:
“எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தின் வளர்ச்சியில் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருப்பதால் இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்கூடாது. அதற்காக தான், நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன்.
கட்சியை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது.” எனத் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.