விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு
Updated on
1 min read

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இந்திய தேர்தல் ஆணையத்தில் புதன்கிழமை மனு அளித்தார்.

கடந்த ஜூன் 4-ஆம் தேதி வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்றார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இதையடுத்து, மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேவேளையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக கடந்த ஜூன் 6-ஆம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலர்

பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணைய அதிகாரியிடம் சமர்ப்பித்துள்ளோம். எங்கள் கோரிக்கையில் உள்ள நியாயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ள தேர்தல் ஆணையம், அடுத்த ஒரு வார காலத்தில் பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக, விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் 13-ஆவது சுற்றுக்குப் பின்னர் நேரடியாக 19-ஆவது சுற்றுக்குத் தாவினர். உணவு இடைவேளைக்குச் செல்லும் நேரத்தில் 5 சுற்று வாக்குகளின் எண்ணிக்கையை முடித்தனர். உணவு இடைவேளையை சுமார் 3 மணி நேரம் வரை நீட்டித்து, யாரையும் மையத்தின் உள்ளே அனுமதிக்கவில்லை. தபால் வாக்குகள் இறுதியாக யாரும் இல்லாமல் எண்ணப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை விவகாரத்தில் தனக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரே எங்களிடம் கூறினார்.

எங்கள் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் செவிசாய்க்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நிச்சயம் நாடுவோம். வாக்கு எண்ணிக்கை நாளில் உரிய ஆதரவு மற்றும் அனுபவம் எனக்கு இல்லாததால், அன்றைய தினமே குளறுபடிகளை நிரூபிக்க முடியவில்லை என்றார் விஜய பிரபாகரன்.

தேமுதிக வழக்குரைஞர் ஜனார்தனன், தேமுதிக தில்லி மாநிலத் தலைவர் நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com