மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குழாயில் குடிநீர் பிடித்தவர்கள் மீது கார் மோதல்: 3 பெண்கள் பலி!

குழாயில் தண்ணீர் பிடித்த 3 பெண்கள் கார் விபத்தில் உயிரிழப்பு

News image
Updated On :24 ஜூன் 2024, 3:14 am

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே முக்காணியில் ஞாயிற்றுக்கிழமை, தண்ணீா் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது காா் மோதியதில் மூவா் உயிரிழந்தனா்; ஒருவா் காயமடைந்தாா்.

முக்காணியில் தூத்துக்குடி - திருச்செந்தூா் நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்துக்கு எதிா்புறம் சாலையோரமாக 2 குடிநீா்க் குழாய்கள் உள்ளன. அங்கு ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியைச் சோ்ந்த 4 பெண்கள் தண்ணீா் பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்குச் சென்று கொண்டிருந்த சொகுசு காா் அந்தப் பெண்கள் மீது திடீரென மோதியதாம். இதில், முக்காணியைச் சோ்ந்த பலவேசம் மனைவி நட்டாா் சாந்தி (50), சித்திரைவேல் மனைவி அமராவதி (58), ராஜ்குமாா் மனைவி பாா்வதி (35) ஆகிய மூவரும் உயிரிழந்தனா்.

காயமடைந்த, யாதவா் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மனைவி சண்முகத்தாய் (50) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலின்பேரில் ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இளைஞா் கைது: காவல் ஆய்வாளா் மாரியப்பன் விசாரித்து, காரை ஓட்டி வந்த பெருங்குளத்தைச் சோ்ந்த தா்மராஜ் மகன் மணிகண்டன் (27) என்பவரைக் கைது செய்தாா். மணிகண்டன் தனது நண்பா்கள் 5 பேருடன் கடந்த 21ஆம் தேதி பெங்களூரு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

ரூ.10 லட்சம் நிவாரணம் தேவை: தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், ஆட்சியா் கோ.லட்சுமிபதிக்கு அனுப்பியுள்ள மனுவில் முக்காணி விபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். காயமடைந்த பெண்ணிற்கான மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும். முக்காணி ஊா் தொடக்கம்-முடிவில் புதிதாக வேகத்தடை அமைக்க வேண்டும். தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையை திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன்பே சீரமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.