சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று தொடக்கி வைத்தார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ், அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பது குறித்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில், ஆசிரியர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா காலத்துக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கேற்ப, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளும், உயர்கல்வியில் இட ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஐந்து வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் இன்று முதல் சேர்க்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.