தஞ்சாவூர்: உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலையொட்டி உள்ள அகழியில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பக்தர்கள் அதிகமாக வருகை புரிந்து வருகின்றனர்.
தஞ்சாவூர் பெரிய கோயில் முகப்பு பகுதியில் அகழி உள்ளது. இதனை முறையாக பராமரிக்காமல் தண்ணீர் இன்றி, கோட்டை சுவர்கள் சேதமடைந்து அதில் குப்பை கழிவுகளாக உள்ளது.
இந்த நிலையில், ராஜராஜ சோழன் சிலை பின்புறம் உள்ள அகழியில் வியாழக்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்தது.இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாநகராட்சி பணியாளர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். சாலையோரக் கடைகளிலிருந்து கொட்டப்பட்ட குப்பைகளில் இருந்து தீ பற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.