எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர்.
இந்த நிலையில், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை அங்கு வந்த இலங்கை கடற்படை கைது செய்து. அவர்களது 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்பட்டு இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் தமிழக மீனவர்கள் 4 பேருக்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறைதண்டனை அளித்து தீர்ப்பளித்தது இலங்கை நீதிமன்றம். அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, அவர்களின் தண்டனையை ரத்து செய்யாத இலங்கை அரசு,சில வாரங்களாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 18 மீனவர்களை விடுதலை செய்தது. அவர்கள் விமானம் மூலம் சனிக்கிழமை சென்னை வந்ததற்கு அடுத்த நாளே 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.