நாமக்கல்: திமுக என்றாலே ஊழல், கட்டப்பஞ்சாயத்து கட்சி என்ற நிலை மாறி போதைப்பொருள் கடத்தும் கட்சியாக மாறியுள்ளது என்றார் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை, பால்பண்ணைத் துறை இணை அமைச்சர் எல் முருகன்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் திமுக ஈடுபட்டது. ஆனால் தற்போது போதைப்பொருள்கள் கடத்தும் கட்சியாக மாறியுள்ளது, திமுக முக்கிய நிர்வாகி ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
குஜராத் வழியாக போதைப் பொருள் கடத்துவதை மத்திய அரசு கண்காணித்தன் மூலமே அவை பிடிப்பட்டு வருகிறது, இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் போதைப் பொருள்கள் கடத்துபவர்களாக உள்ளனர். தேர்தல் ஆணையர் அருண்கோயல் பதவி விலகியது குறித்த கேள்விக்கு, ஒரு அதிகாரி சென்றால் மற்றொருவர் வருவார்.
மதுரையில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல வேண்டுமென ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்துவோம் என்றார். இந்தக் கூட்டத்தில், பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.