தமிழகத்தில் வாக்கு கேட்கிற தார்மிக உரிமை மோடிக்கு இல்லை: முத்தரசன் பேட்டி

பேரிடர் நிதி உதவி வழங்காத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகத்தில் வாக்கு கேட்கிற தார்மிக உரிமை இல்லை
தமிழகத்தில் வாக்கு கேட்கிற தார்மிக உரிமை மோடிக்கு இல்லை: முத்தரசன் பேட்டி

கோவை: பேரிடர் நிதி உதவி வழங்காத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகத்தில் வாக்கு கேட்கிற தார்மிக உரிமை இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"இன்னும் சில நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயகம் காப்பாற்றப்படவும் அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்படும் வாய்ப்புகள் ஏற்படும். அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் பாதுகாக்கப்படவும் இன்றைக்கு இருக்கக்கூடிய மோடி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் இல்லை என்றால் நாடு பேராபத்தை சந்திக்கும்.

இந்தியா கூட்டணி உருவாதற்கு தமிழ்நாடு தான் முக்கிய காரணம் குறிப்பாக மு.க ஸ்டாலின். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு நேற்றுடன் முடிவடைந்து இருக்கிறது. இந்திய அளவிலும் நல்ல கூட்டணி உருவாகி இருக்கிறது. பிகார்,உத்திரபிரதேசம்,மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தொகுதி உடன்பாடுகள் நல்ல முறையில் ஏற்பட்டுள்ளன. இந்த தேர்தலை இந்தியா கூட்டணி கொள்கை ரீதியாக எதிர்கொள்ளும்.பாஜகவின் அராஜகங்களுக்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்.

மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒருவர் ராஜிநாமா செய்துவிட்டார்.தற்போது அருண் கோயலும் திடீரென ராஜிநாமா செய்திருக்கிறார்.அவரது ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போது தலைவர் மட்டுமே மீதம் இருக்கிறார்.தேர்தல் ஆணையம் என்பது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய உரிமை. அதையே மோடி அரசாங்கம் கேள்விக்குறியாகிவிட்டது. எனவே,நாடாளுமன்றத் தேர்தல் ஒரு ஜனநாயக முறையில் நடைபெறுமா என்ற மிகப்பெரிய ஐயம் ஏற்பட்டுள்ளது. அருண் கோயில் ஏன் ராஜிநாமா செய்தார் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் அல்லது ராஜிநாமாவை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்.

தேர்தல் பத்திரம் ஒரு நிறுவனம் மூன்றாண்டுகள் லாபகரமாக இயங்கினால் அவர்கள் ஏழு சதவீதம் தேர்தல் பத்திரமாக வழங்கலாம் என்ற ஒரு நிபந்தனை இருந்தது. அந்த நிபந்தனை நீக்கப்பட்டு விட்டது. ஒரு நிறுவனம் லாபத்தில் இயங்கினாலும் நஷ்டத்தில் இயங்கினாலும் அவர்கள் விரும்பினால் எவ்வளவு நீதி வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று திருத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பத்திரம் மூலம் மிகப் பெரிய அளவில் ஆதாயம் பெற்ற கட்சி பாரதிய ஜனதா கட்சி.

தேர்தல் பத்திரம் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கிக்கு அறிவுறுத்தி உள்ளது. ஸ்டேட் வங்கி கால அவகாசம் பெற்றுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியிடம் கால அவகாசம் கேட்கச் சொன்னது யார்? மோடி அரசு தான் அவகாசம் கேட்கச் சொல்லி இருக்க வேண்டும். இத்தகைய ஊழலில் ஈடுபட்டிருக்கக் கூடிய நரேந்திர மோடி ஊழல் பற்றி பேசுவதற்கு கிஞ்சிற்றும் அருகதை அற்றவர்.

நேரு காலம் முதல் பிரதமர் நிவாரண நிதி என்ற ஒரு நிதி மத்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. அது நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தப்படும். அதற்கு வரவு செலவு கணக்கு உண்டு. தகவல் உரிமைச் சட்டத்திலும் தகவல் கேட்டு பெற முடியும். ஆனால் மோடி பிரதமரானதும் அது

கலைக்கப்பட்டு பிஎம் கேர் என்ற ஒரு புதிய நிதி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் எவ்வளவு நிதி வந்தது எங்க போனது என்பதை யாரும் கேட்க முடியாது. இதைவிட பெரிய ஊழல் என்னவாக இருக்க முடியும்.

தமிழகத்தில் வாக்கு கேட்கிற தார்மிக உரிமை மோடிக்கு இல்லை: முத்தரசன் பேட்டி
எம்ஜிஆரின் இடத்தை விஜய் நிரப்புவாரா? - குஷ்பு பேட்டி

கார்ப்பரேட் நிறுவனங்கள்,பெரிய வியாபாரிகள் தேசிய வங்கிகளில் இருந்து கடன் பெறுகிறார்கள் அவர்கள் பெறுகிற கடனுக்கு வட்டியோ, கடனை திரும்ப செலுத்துவதும் இல்லை. அவை அனைத்தும் வராக கடனாக மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.வைர வியாபாரி நீரவ் மோடி துபையில் இருக்கிற வங்கியில் ரூ.100 கோடி கடன் பெற்றார். அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை.அது சம்பந்தமாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. நீதிமன்றம் உடனடியாக ரூ. 60 கோடி திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.ஆனால் செலுத்தப்படவில்லை. இது போன்றவர்கள் தான் மோடியின் நண்பர்கள். எனவே மோடிக்கு ஊழல் பற்றி பேச அருகதை இல்லை.

இந்தியாவில் இருக்கிற 140 கோடி மக்களும் என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று மோடி பேசுகிறார். குடும்பத்தை பற்றி எல்லாம் பேசுவதற்கு மோடிக்கு அருகதை இல்லை. பிரதமர் பொறுப்பு என்பது மிக உயர்ந்த பொறுப்பு அந்த பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு நபர் பொய் சொல்லக்கூடாது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டத்திற்கு மாநில அரசு ரூ.500 கோடி என்று சொன்னால் மத்திய அரசு ரூ.500 கோடி தர வேண்டும் இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு தரவில்லை. ஆனால் மோடி சென்னையில் பேசுகிற போது எங்களுடைய அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறது என்று அப்பட்டமாக பொய் பேசுகிறார்.

தமிழகத்தில் வாக்கு கேட்கிற தார்மிக உரிமை மோடிக்கு இல்லை: முத்தரசன் பேட்டி
நாற்பதும் நமதே! நாடும் நமதே! - தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இயற்கை சீற்றங்களால் சென்னை உட்பட ஒன்பது மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், உயர்மட்ட குழு என எல்லாம் வந்து பார்வையிட்டு சென்றார்கள். தமிழகத்தைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டின் பாதிப்பை எடுத்துக் கூறி ரூ. 37 ஆயிரம் கோடி நிதி வேண்டும் என்று கேட்டார்கள். உள்துறை அமைச்சரும் தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் இதுவரை ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.

தமிழகத்திற்கு பேரிடர் நிதி கொடுக்காத பிரதமருக்கு தமிழகத்தில் ஓட்டு கேட்க என்ன உரிமை இருக்கிறது என்று முத்தரசன் கேள்வி எழுப்பினர். தமிழகத்திற்கு வருவதற்கு மோடிக்கு தார்மிக ரீதியான உரிமை இல்லை. கேரளாவில் இந்திய கூட்டணி தான் போட்டியிடுகிறது மூன்றாவது அணி இல்லை. ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும், யார் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி இந்தியா கூட்டணியின் வெற்றிதான்," என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com