சென்னை: நேரடியாக பொதுப் போக்குவரத்து வசதி மற்றும் எந்த ஊருக்கும் சென்று சேர போக்குவரத்து என அண்மையில் திறக்கப்பட்ட கிங் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உடன் வருவோர், மருத்துவமனை ஊழியர்கள் மட்டுமல்லாமல் மருத்துவர்களும் அன்றாடம் அவதிக்குள்ளாகிறார்கள்.
மருத்துவமனைக்கு வரும் முதியவர்கள், தங்களது பகுதிகளுக்குச் செல்ல நேரடியாக எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாததால் கடுந்துயரத்துக்கு ஆளாகிறார்கள். சில வயதான நோயாளிகள், சென்னை சென்டிரலில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதியோர் நலத்துறை மருத்துவர்களைப் பார்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறு பரிந்துரைக்கப்படும் முதியவர்களை அழைத்துச் செல்ல தன்னார்வலர்கள் மற்றும் இலாபநோக்கமற்ற அமைப்புகளின் உதவியை நாடுகிறார்கள் அதிகாரிகள்.
அசோக் பில்லர் - சைதாப்பேட்டை, அசோக் பில்லர் - டிஃபென்ஸ் காலனி வரை இயக்கப்படும் எஸ் 30 மற்றும் எஸ் 35 ஆகிய சிற்றுந்துகள் மட்டுமே நேரடியாக இந்த மருத்துவமனை வளாகத்துக்கு வருகின்றன. அந்த சிற்றுந்துகளும் போதிய அளவில் இயக்கப்படுவதில்லை என்பதாலும் நேரம் குறித்த விவரம் தெரியவில்லை என்றும் புலம்புகிறார்கள் நோயாளிகள்.
அடுத்த போக்குவரத்து வசதி என்றால், அது 800 மீட்டரில் இருக்கும் கிண்டி பேருந்து நிலையம்தான்.
நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல வேண்டியவர்கள், கிண்டி பேருந்து நிலையத்துக்கு நடந்து செல்கிறார்கள். நோயாளிகளின் தொடர் புகாரைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கும், கிண்டி பேருந்து நிலையத்துக்கும் இடையே போக்குவரத்து இயக்கப்பட்டது என்றாலும், ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒன்று இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அது தற்போது 20 நிமிடத்துக்கு ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அதுவும் காலை முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள், நோயாளிகளுடன் வருவோர்.
போக்குவரத்து வசதி போதிய அளவில் இல்லாததால் நோயாளிகள், உடன் வருவோர், பார்வையாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆட்டோ, கார் அல்லது பைக் போன்ற சேவை மூலமாக செல்ல வேண்டும் அல்லது பரபரப்பான ஆலந்தூர் சாலை வழியாக கிண்டி டிப்போவுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதாவது, கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் வருவதென்றால் ரூ.75 ஆகிறது. மருத்துவமனை ஊழியர்கள் பலரும் அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் தொடர்பு எண்களை பெற்றுக்கொண்டு, வேலை நேரம் முடிந்ததும் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து, அந்த ஆட்டோவில் பேருந்து நிலையம் செல்கிறோம் என்கிறார்கள்.
கிங் மருத்துவமனைக்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாதது குறித்து கேட்டபோது, நோயாளிகளின் வசதிக்காக போக்குவரத்து துறையிடம் இந்த விவகாரம் கொண்டு செல்லப்படும் என்று சுகாதார செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
230 கோடி செலவில் 1,000 படுக்கைகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. முதியோர்களுக்கான தேசிய மையம் பிப்ரவரி 25 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் கீழ் இயங்கும் இந்த மருத்துவமனையில், 40 தீவிர சிகிச்சைப் பிரிவுகளுடன் 200 படுக்கைகள் வசதியும் உள்ளது.