அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தொடங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தமாக, அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் பாஜகவுடன் கூட்டணியில் போட்டியிட இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிகின்றன.
இந்த நிலையில், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆரணி அல்லது வேலூர் தொகுதியில் போட்டியிட மன்சூர் அலிகான் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.