இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள்: விண்ணப்பங்களை பதிவேற்றம் 
செய்ய அவகாசம் நீட்டிப்பு

இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள்: விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் நீட்டிப்பு

இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தோ்வுக்கு விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தோ்வுக்கு விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் மாா்ச் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணிகளுக்கு 10,000-க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், 1,768 இடைநிலை ஆசிரியா் காலி இடங்களை நிரப்பத் தோ்வு நடத்தப்படவுள்ளது. இதற்கு இணையவழியில் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விண்ணப்பதாரா்கள் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் கோரியிருந்தனா். அதை ஏற்று, இணையவழியில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு மாா்ச் 20-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியா் தோ்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள மாா்ச் 21 முதல் 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைச் சமா்ப்பித்து தோ்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரா்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவா் எனவும், விண்ணப்பதாரா்களின் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியை மாற்றம் செய்ய முடியாது எனவும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடா்பாக எந்தவித கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படாது எனவும் ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com