மதிமுக நிறுவனத் தலைவர்களில் ஒருவரும்,ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி (77) வியாழக்கிழமை அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி உயிர் பிழைத்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில்தான் நான் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு வந்தேன். ஆனால் முடிவுகள் வேறாகிவிட்டன.
கல்லூரி காலம் தொட்டு கொள்கை உணர்வோடு பழகி என்னோடு பயணம் செய்த ஆருயிர் சகோதரரை, மதிமுகவின் கொங்குச் சீமையின் கொள்கைக் காவலரை இழந்த பெரும் துயரில் கண்ணீர் வடிக்கிறேன். ஆறாத் துயரமும், அளவிட முடியா வேதனையும் அடைந்தேன்.
கடந்த முறை மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற போது, "தமிழ்நாடே என் தாய்நாடு" என்று முழக்கமிட்டு பதவி ஏற்ற நிகழ்வு நம் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.
அவரது பிரிவால் கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், மதிமுக கண்ணின் மணிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.