டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது.
இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல தமிழ் நடிகர் டேனியல் பாலாஜி(வயது 48) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
நடிகை ராதிகா சரத்குமாரின் சித்தி தொடரில் முதல்முறையாக டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் டேனியல் பாலாஜி ஆனார்.
நடிகர் ஸ்ரீகாந்தின் ’ஏப்ரல் மாதத்தில்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமான டேனியல் பாலாஜி, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், காக்க காக்க, பைரவா, பிகில் போன்ற பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார்.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலாஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இயக்குநரும், டேனியல் பாலாஜியின் நெருங்கிய நண்பருமான மோகன் ராஜா எக்ஸ் தளத்தில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.
நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் டேனியல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.