அவிநாசி: அவிநாசி அருகே ஓட்டுநர் மது போதையில் அரசுப் பேருந்தை இயக்குவதை அறிந்த பயணிகள் பாதி வழியிலேயே பேருந்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உதகையில் இருந்து பயணிகளுடன் அரசுப் பேருந்து அவிநாசி வழியாக துறையூர் நோக்கி திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் அடுத்து வரும் போது தாறுமாறாக பேருந்து சென்றுள்ளது.
இதையறிந்த பயணிகள் ஓட்டுநரை கவணித்த போது, அவர் மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவிநாசி கருவலூர் அருகே வரும் போது, பேருந்தைப் பயணிகள் பாதியிலேயே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த அவிநாசி காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரத்துக்கு பிறகு மாற்று ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் தங்களது இருப்பிடத்துக்கு செல்ல காலதாமதம் ஏற்பட்டாலும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியாதால் பயணிகள் மகிழ்ச்சிடைந்தனர்.
இதனால் கருவலூரில் பெரும் பரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்த விடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, ஓட்டுநர் மது போதையில் இருப்பது பரிசோதனைகளில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து துறையினரிடம் தெரியப்படுத்தி, மாற்று ஓட்டுநர் ஏற்பாடு செய்து பாதுகாப்பாக பயணிகள் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார்.