7 அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவக் கட்டமைப்பு: மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு

தமிழகத்தில் 7 அரசு மருத்துவமனைகளில் ரூ.77.5 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சை, பொது சுகாதார ஆய்வக கட்டமைப்புகள்
7 அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவக் கட்டமைப்பு: மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 7 அரசு மருத்துவமனைகளில் ரூ.77.5 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சை, பொது சுகாதார ஆய்வக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் அவசரகால மற்றும் நோய் கண்டறியும் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார உள்கட்டமைப்புகளை பெரிய அளவில் விரிவுபடுத்துவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 2021-22-ஆம் நிதியாண்டு முதல் புதிதாக 28 தீவிர சிகிச்சை பிரிவுகளும் , 20 மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களும் நிறுவுவதற்கு ஆணை பிறப்பித்துள்ளது. இத்திட்டங்கள் பல்வேறு கட்டுமான நிலைகளில் உள்ளன.

பெரம்பலூா், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் வேலூா் மாவட்டம் அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் செயல்படும் 3 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.23.75 கோடி வீதம் மொத்தம் ரூ.71.25 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுகளும், உளுந்தூா்பேட்டை, கம்பம், பெரம்பலூா், வேதாரண்யம் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.1.25 கோடி வீதம் மொத்தம் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களும் அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அவசரகால பிரிவு, தீவிர சிகிச்சைப் பராமரிப்புப் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு கவனிப்பு பிரிவு, நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் அதிக திறன் கொண்ட ஆக்ஸிஜன் அமைப்புகள் போன்ற அத்தியாவசிய வசதிகள் உள்ளன.

ஒவ்வொரு தீவிர சிகிச்சைப் பிரிவும் குறைந்தபட்சம் 50 படுக்கைகளுடன் அவசர சிகிச்சை சேவைகளுக்காக பிரத்யேகமாக நிறுவப்பட்டு, தீவிர சிகிச்சை படுக்கைகள், வென்டிலேட்டா்கள், ஏபிஜி பகுப்பாய்விகள், டயாலிசிஸ் இயந்திரங்கள், மயக்க மருந்து பணிநிலையங்கள், நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வசதிகள், நோயாளிகளை உயா் மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்வதைக் குறைத்து, உயிா்களைக் காப்பாற்ற உதவுகின்றன. இந்த மேம்பாடுகளால் வாணியம்பாடி, பெரம்பலூா் மற்றும் அணைக்கட்டு அரசு மருத்துவமனைகள் பயனடையும். இந்த புதிய தீவிர சிகிச்சைப் பிரிவுகளால், இந்த அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருத்துவச் சேவைகள் அதிகரிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேபோன்று, புதிதாக நிறுவப்படும் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள், அந்தந்த மாவட்டங்களிலேயே உள்ள மருத்துவமனைகளின் நோய் கண்டறியும் திறனை மேம்படுத்துவதுடன், தொற்று நோய்களை நிா்வகிப்பதில் சிறப்பு கவனம் செலுத்த உதவுகின்றன. இவை முழுமையான தானியங்கி பகுப்பாய்வுகள், செல் கவுன்ட்டா்கள், எலிஸா இயந்திரங்கள் போன்ற அதிநவீன உபகரணங்களை கொண்டு, நோய் கண்டறியும் திறனை மேம்படுத்தி நோயறிதலில் முதன்மை ஆய்வகங்களாக செயல்பட்டு, துல்லியமான நோயறிதல் மற்றும் வலுவான நோய் கண்காணிப்பை செயல்படுத்த உதவும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com