மழையால் சாலைகள் நிரம்புகின்றன.. குளங்கள்? ஒரு சொட்டு நீர் இல்லாத 20% நீர்நிலைகள்!!

மழை பெய்தால் நிரம்பிவிடுமா என்ன என்று கேட்கும் அளவுக்கு பருவமழை முடிந்தும் சொட்டு நீர் இல்லாமல் 20 சதவீத நீர்நிலைகள் உள்ளன.
சாலைகள்
சாலைகள்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் இயல்பை விட அதிகமாகவே மழையைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறது தென்கிழக்குப் பருவமழை, எனினும் 20 சதவீத நீர்நிலைகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை என்கின்றன தரவுகள்.

தமிழகத்தின் நீர் வளத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் 14,139 நீர்நிலைகளில், 2,802 (20%) நீர்நிலைகள் முழுமையாக வறண்டுபோயிருக்கின்றன. 5,963 நீர்நிலைகளில் அதாவது 40 சதவீத நீர்நிலைகளில் இருப்பதோ 25 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீர்தான் என்கிறது நீர்வளத்துறை தரவுகள்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை விடவும் தற்போது அபாயத்தில் இருப்பது மதுரை மற்றும் திருநெல்வேலிதான். மதுரையில் உள்ள 1340 நீர்நிலைகளில் 487ல் தண்ணீர் இல்லை, அதுபோலவே, நெல்லையில் உள்ள 780 நீர்நிலைகளில் 419 வறண்டுபோயிருக்கின்றன.

ஏரிகள், குளங்கள் மற்றும் தடுப்பணைகளுக்கு இடையிலான இணைப்புகள் ஆக்ரமிப்புகளால் தடைபட்டுவிட்டன. இதனால், தமிழகத்தில் போதுமான மழை அளவு இருந்தாலும் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் பறிபோயிருக்கின்றன என்கிறார்கள் அதிகாரிகள்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்ரமணியன் கூறுகையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள்படி, தமிழகத்துக்கு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பு அளவை விட 19 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. காவிரி படுகையிலும் நீர்வரத்து அதிகமாகவே இருந்துள்ளது. எனினும், டெல்டா மாவட்டங்களில் இருக்கும் ஏராளமான விவசாய நீர்நிலைகள் வறண்டுதான் உள்ளன என்கிறார்.

டெல்டா மாவட்ட விவசாயிகள், தாளடி, குருவை, சம்பா என மூன்று பருவக் காலங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செய்துவந்தனர். ஆனால், தண்ணீர் பற்றாக்குறையால் தற்போது விவசாயிகள் இரண்டு பருவக் காலங்களில் மட்டும் விவசாயம் செய்கிறார்கள்.

நீர்நிலைகளை இணைக்கும் ஏராளமான கால்வாய்கள் ஆக்ரமிப்புகளால் தடைபட்டுவிட்டன. இதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள் மன்னார்குடியைச் சேர்ந்த விவசாயிகள். வளர்ந்து வரும் மக்கள்தொகைப் பெருக்கத்தை முன்னிட்டு தற்போதாவது ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு நீர்நிலைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார்கள் ஒருமித்த குரலில்.

மூத்த அதிகாரி இது பற்றி கூறுகையி, கடந்த காலங்களில், மாநிலம் முழுக்க நீர்வளத்துறை 30 ஆயிரம் நீர்நிலைகளை பராமரித்துவந்தது. இந்த எண் தற்போது பாதியாகிவிட்டது. நீர்நிலைகளைப் பராமரிக்கத் தேவையான நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில், நீர்நிலைகள் பராமரிப்புக்கு தமிழக அரசு ஒதுக்கும் நிதி குறைவுதான் என்கிறார்கள்.

ஆக்ரமிப்புகளை அகற்றம் பணியில், நீர்வளத்துறையும் வருவாய்த் துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்தாலும் உடனடியாக அரசியல் அழுத்தம் வந்து பணிகளை முடக்கி விடுகிறது என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com