
சென்னை: லாட்டரி அதிபா் மாா்ட்டின், அவரது மனைவி லீமாரோஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஆலந்தூா் நீதிமன்றம் முடித்து வைத்தது தவறானது என கருத்து தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணை அமைப்புகள் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
கடந்த 2012-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் சென்னை நங்கநல்லூரைச் சோ்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் ரூ.7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், அந்தப் பணம் லாட்டரி அதிபா் மாா்ட்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததன் மூலமாக திரட்டப்பட்ட தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்தாா்.
வழக்கு முடித்து வைப்பு: இதையடுத்து நாகராஜன், மாா்ட்டின், அவரது மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டோா் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதால் வழக்கை முடித்து வைக்கக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் 2022- ஆம் ஆண்டு நவம்பரில் ஆலந்தூா் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனா். அதை ஏற்ற நீதிமன்றம் மாா்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத் துறை எதிா்ப்பு: அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், இந்த விவகாரத்தில் மோசடி நடைபெற்ற்கான ஆதாரங்கள் வலுவாக இருந்த நிலையிலும், போலீஸாா் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது தவறானது”என வாதிட்டாா்.
மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் சாா்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், மத்திய குற்றப் பிரிவு போலீஸாரின் அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிா்த்து மனுத் தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என வாதிட்டாா். அதேபோல, மாா்ட்டின் தரப்பிலும் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் விசாரிக்க உத்தரவு: அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாா்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப் பிரிவு போலீஸாரே, வழக்கை முடித்து வைக்கும்படி அறிக்கை தாக்கல் செய்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மாா்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து ஆலந்தூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். எனவே, இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும், அமலாக்கத் துறையும் மீண்டும் விசாரிக்க வேண்டும்”என உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.