சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தமிழகத்தில் மதுவிலக்கைப் பற்றி பேச தகுதியான கட்சி பாமகதான்: ராமதாஸ்

தமிழகத்தில் மதுவிலக்கைப் பற்றி பேச தகுதியான கட்சி பாமக தான் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

News image
பாமக நிறுவனர் ராமதாஸுடன் தலைமை நிலையச்செயலர் அன்பழகன், மாவட்டச் செயலர் ஜெயராஜ் உள்ளிட்டோர்.
Updated On :12 செப்டம்பர் 2024, 6:53 am

DIN

தமிழகத்தில் மதுவிலக்க பற்றி பேச தகுதியான கட்சி பாமக தான் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

காவிரிப் பாசன விவசாயிகள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் கிடைக்கவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்க வங்கிக் கணக்கை வருமானவரித்துறை முடக்கி வைத்திருப்பதே இதற்கு காரணமாகும்.

ரூ. 1 கோடிக்கும் மேல் பரிவர்த்தனை உள்ள கணக்குகளை 11 சதவீதம் பிடித்தம் செய்யாததால் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் சம்பா சாகுபடிக்கு கடன் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வருமான வரித்துறையிடம் பேசி இந்த முடக்கத்தை நீக்க தமிழக அரசு முயற்சி செய்யவேண்டும். உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத உள் ஒதுக்கீடு செய்ய ஆய்வு செய்து அறிக்கை வெளியிட பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு அரசு ஆணையிட்டு, 20 மாதங்கள் முடிந்தும் இந்த ஆணையம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

முதலில் 3 மாதங்கள் காலக்கெடு அளிக்கப்பட்டு, பின்னர் 3 முறை காலக்கெடு நீடிக்கப்பட்டது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை திரட்ட ஆணையம் என்ன செய்யப்போகிறது?.

முதல்வர் கூறியது போல மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்தும்வரை காத்திருக்கப்போகிறதா? பிறகு இதற்கு ஆணையம் உள்ளது? அரசும் ஆணையமும் கூட்டணி அமைத்துக்கொண்டு வன்னிய மக்களை ஏமாற்ற வேண்டும் என நினைத்தால் அவர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் நிதியை மத்திய அரசு ஒதுக்க மறுத்தால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவேண்டும். தமிழகத்திற்கு ரூ. 573 கோடி ஒதுக்க மத்திய அரசு மறுத்துள்ளதால் மோதல் முற்றுகிறது.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகளைத் தமிழகத்தில் திறக்கவேண்டும் என மத்திய அரசு நிபந்தனைகளை விதிப்பதும், அதை தமிழக அரசு மறுப்பதும்தான் இந்தச் சிக்கலுக்கு காரணம். இதனை சரி செய்ய அமைச்சர் குழுவை தில்லிக்கு அனுப்பி கல்வி நிதியை வழக்க வலிறுத்தவேண்டும். அப்போதும் மறுத்தால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சீனா பூண்டுகள் உடல்நலத்துக்குக் கேடு என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் சீன பூண்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பூண்டு விற்பனையை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும். கடை கடையாக உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்யவேண்டும்.

திருமாவளவன் கேள்விக்கு ராமதாஸ் பதில்

மதவாதக் கட்சியான பாஜக, சாதியவாத கட்சியான பாமக ஆகிய கட்சிகளுக்கு மது ஒழிப்பு மாநாட்டுக்கு அனுமதி இல்லை என்று திருமாவளவன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு ராமதாஸ் பதிலளித்தார்.

மதுவிலக்கு

அப்போது அவர் கூறுகையில், ”தமிழகக் கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான். இதைப்பற்றி பேச தகுதியான கட்சி பாமகதான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பாமக போராடி வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுகவினர் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள். 35 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் பாமக மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. டாஸ்மாக் தொடங்கப்பட்ட போது இருந்த 7200 கடைகளை 4800 ஆக குறைத்தது பாமகதான். இதற்கான சட்டப்போராட்டங்களை பாமகதான் செய்தது.

காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டதை 10 மணி நேரமாக குறைத்தது பாமக. பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்கு என பாமக அறிவித்த பின்பே மற்ற கட்சிகள், அதை வலிறுத்த தொடங்கியது. பாமக அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்” என்றார் அவர்.

அப்போது தலைமை நிலையச்செயலர் அன்பழகன், மாவட்டச் செயலர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.