
சென்னையில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்த விஜய், பெரியார் திடலுக்கு நேரில் சென்று அவரின் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய பிறகு, முதல்முறையாக அரசியல் நிகழ்வில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
விஜய்யுடன் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக இன்று காலை பெரியார் பிறந்த நாளையொட்டி அறிக்கை வெளியிட்ட நடிகர் விஜய், சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் எனத் தெரிவித்திருந்தார்.
விஜய் வெளியிட்ட அறிக்கை:
”சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்.
சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.