நாமக்கல்: பூக்கடை வியாபாரிக்கு காவல் துறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததை கண்டித்து, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் அவர் புதன்கிழமை போராட்டம் நடத்தினார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், சீதாராம் பாளையத்தை சேர்ந்தவர் ராமன்(38). இவர், அதே பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியில் இருந்து சாமந்தி பூக்களை மூன்று சாக்கு மூட்டைகளில் கட்டி தனக்கு சொந்தமான காரில் திருச்செங்கோடு நோக்கி புதன்கிழமை வந்தார்.
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, போக்குவரத்து காவல் துறையினர், விதிகளை மீறி காரில் பூக்கள் மூட்டை எடுத்து வந்ததால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ராமனுக்கு ஆன்லைன் மூலம் அதற்கான ரசீது வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொண்டு வந்த பூக்களை நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிக்க: இன்று... சூரியனுக்கு மிக அருகில் பூமி!
அப்போது, சேலம் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி, நாமக்கல் ஆட்சியர் தன்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என்றார். அவரது போராட்டத்தில் தாய் மீனாவும் பங்கேற்று காவல்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.