நாட்டின் 75-வது குடியரசு நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சியர் ச.உமா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்.
குடியரசு நாளைச் சிறப்பிக்கும் வகையில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை வண்ண பலூன்களும், வெண்புறாக்களும் வானில் பறக்கவிடப்பட்டன. விடுதலை போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து மாவட்டா ஆட்சியர் கெளரவித்தார்.
அதன்பிறகு, அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர்களுக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக்குழுவினருக்கும் ஆட்சியர் பாராட்டு தெரிவித்து கேடயங்களை வழங்கினார்.
காவல்துறையைச் சேர்ந்த 42 காவல்துறை அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கங்களையும், சிறப்பாக பணியாற்றிய 34 காவல்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், வாத்தியக்குழுவை சேர்ந்த காவலர்களுக்கு கேடயங்களையும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 287 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.
இதனையடுத்து, பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.87.45 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குடியரசு தின விழாவையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் 6 பள்ளிகளை சேர்ந்த 634 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: நெல்லையில் தேசியக்கொடிக்கு காந்திமதி யானை மரியாதை!
விழாவில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.