
சென்னை வந்துள்ள அமித் ஷா, முன்னாள் ஆளுநர் தமிழிசையின் இல்லத்திற்குச் சென்று அவரது தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு வியாழக்கிழமை இரவு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கியுள்ளாா். தமிழக பாஜக தலைவா் தோ்வு, 2026 பேரவைத் தோ்தல் கூட்டணி வியூகம் ஆகியவை குறித்து பாஜக மூத்த தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தவுள்ளாா்.
தொடா்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போதுள்ள தலைவா்கள் சிலரை நேரில் அழைத்து பேச முடிவு செய்துள்ளாா். ஜி.கே. வாசனுடனான சந்திப்பு உறுதியாகியுள்ளது.
மேலும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க இதுவரை நேரம் கொடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமித் ஷா, நண்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார். 2026 பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்த அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே சென்னை வந்துள்ள அமித் ஷா, முன்னாள் ஆளுநர் தமிழிசையின் இல்லத்திற்குச் சென்றார். தமிழிசையின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் மறைவுக்கு அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தமிழிசைக்கும் ஆறுதல் தெரிய்வத்துள்ளார்.