

தமிழக அமைச்சர் பொன்முடிக்கு திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாதுவை குறிப்பிட்டு மிகவும் கொச்சையான கருத்துகளை பதிவிட்டிருந்தார்.
பொதுக்கூட்ட மேடையில் பொன்முடி பேசிய காணொலி வைரலான நிலையில், சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்துள்ளன.
இந்த நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.
திமுக பொதுக்கூட்ட மேடைகளில் அமைச்சர் பொன்முடியின் பேச்சு தொடர்ந்து சர்ச்சையாகி வருகின்றது. ஏற்கெனவே பெண்கள் இலவச பேருந்து சேவை தொடர்பாக பொன்முடி பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற பொன்முடி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தார். உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைத்ததை தொடர்ந்து மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார் பொன்முடி.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் பொன்முடியிடம் இருந்த உயர்க்கல்வித் துறை பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.