கிருஷ்ணகிரியில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
2,000 ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுநாதரை தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் மக்கள், தங்கள் கைகளிலே ஒலிவ மரக்கிளைகளை ஏந்திக்கொண்டு, இயேசுநாதரை கழுதை மீது அமர வைத்து, ஜெருசலேம் நகரில் பவனி வந்தனர்.
இந்த நாளை, உலகில் உள்ள கிறிஸ்தவ மக்கள், குருத்தோலை ஞாயிறாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி - பழையபேட்டை புனித இஞ்ஞாசியார் ஆலயத்திலிருந்து தொடங்கிய குருத்தோலை பவனி காந்தி சிலை, தர்மராஜா கோயில் தெரு வழியாக, புனித பாத்திமா அன்னை திருத்தலத்தை வந்தடைந்தது.
இந்த குருத்தோலை பவனியில், ஏராளமான கி்றிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு, உன்னதங்களின் ஓசன்னா பாடலைப் பாடியபடி பவனி வந்தனர்.
பின்னர், தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு. லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதே போல் ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, கந்திகுப்பம், எலத்தகிரி என மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும், குருத்தோலை பவனி மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன.
இதையும் படிக்க: திருப்பத்தூர் அருகே மீன்பிடித் திருவிழா