தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த நன்னாளில், உலகெங்கும் வாழ்கின்ற தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
எல்.முருகன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
குரோதி வருடம் நிறைவடைந்து ஸ்ரீவிசுவாவசு வருடத்தில் நாம் அடியெடுத்து வைக்கிறோம்.
இந்த தமிழ்ப் புத்தாண்டு நாளானது அனைத்து மக்களுக்கும், அன்பையும், நிறைந்த ஆரோக்கியத்தையும், மிகுந்த மகிழ்ச்சியையும், வெற்றிகளையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி உலகெங்கும் சென்று தமிழ் மொழியின் பெருமையை முழங்கி வருகிறார். உலகெங்கும் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழுக்கு இருக்கையை உருவாக்கி வருகிறார். வான் புகழ் கொண்ட வள்ளுவனின் திருக்குறளுக்குப் பெருமை சேர்த்து வருகிறார். ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் 'போலி திராவிட மாடல்' திமுக அரசு, தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கொடுமைகளைச் செய்து வருகிறது.
சித்திரை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இருந்தும் கூட, தங்களுக்கு என்று ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டு, இத்தினத்தை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்க மறுக்கும் திமுக அரசை தமிழக மக்கள் தூக்கி எறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அதற்கு இந்தப் புத்தாண்டில் உறுதி ஏற்போம்.
உலகம் முழுவதும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும், எனது நெஞ்சார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று அவர் குறிப்பட்டுள்ளார்.