/

பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுகிறது திமுக: இபிஎஸ்

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 67% மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி.

News image
கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி- படம் - அதிமுக (யூடியூப்)
Updated On :12 ஆகஸ்ட் 2025, 2:45 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மக்களை காப்போம் தமிழத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரசாரத்தின் 3 ஆம் கட்டமாக இன்று கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை பேரவைத் தொகுதிகளில் சாலை வலம் மேற்கொண்டார்.

இதில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

''தமிழகத்தை திமுக ஆண்டுவந்தாலும், கோவை, திருப்பூரில் அதிமுகதான் ஆளும் கட்சியாக உள்ளது. திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கால்நடை மருத்துவ ஆராய்ச்சி கல்லூரி அத்திகடவு அவினாசி திட்டம் ஆகியவை அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது திமுகவின் யுக்திகளுள் ஒன்று. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நாளுக்கு நாள், கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததுக்கு துணை குடியரசுத் தலைவர் கைகளில் விருது வாங்கினேன். தற்போது, போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 67% மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வீடு, கடைகளுக்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது. வீட்டு வரி 100% உயர்த்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதிகளின் மக்கள், இன்றைய கிருஷ்ணகிரி- ஓசூர் தொழில் துறையின் அசுர வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட இயக்கம் அதிமுகதான் என்பதை நன்கு அறிந்துள்ளனர்.

சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி, தங்களை ஏமாற்றிய திமுகவிற்கு மீண்டும் வாக்களிக்க இத்தொகுதிகளின் மக்கள் தயாராக இல்லை.

மீண்டும் இப்பகுதிகள் ஏற்றம் பெற, புதிய உச்சங்களைத் தொட, 2026-ல் அமையவுள்ள அஇஅதிமுக அரசு நிச்சயம் வழிவகை செய்யும்'' எனக் குறிப்பிட்டார்.

summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has criticized the DMK government for deceiving the people through impossible promises.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.