

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் திமுக சார்பில் இம்பீச்மென்ட் நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி ஹிந்து அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனால், வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே மட்டும் தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, ஹிந்து அமைப்பு தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உயர் நீதிமன்ற பாதுகாப்பில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பில் மனுதாரரை தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிட்டார்.
இதனிடையே, திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்த காவல்துறையினர் தீபம் ஏற்ற அனுமதி கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் நீதிபதி சுவாமிநாதன் சர்ச்சை தீர்ப்பை வழங்கியதாக தமிழக அரசு குற்றம்சாட்டி இருந்தது.
இந்த நிலையில், இன்றைய மக்களவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸை திமுக வழங்கவுள்ளது.
இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டுவர, மக்களவையில் 100 எம்பிக்கள், மாநிலங்களவையின் 50 எம்பிக்கள் கையெழுத்திட வேண்டும். இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பிற கட்சிகளின் எம்பிக்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.