முதல் முறையாக 60 லட்சம் பள்ளி மாணவா்களுக்கு கட்டணமில்லா பயண அட்டை
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இதுவரை இல்லாத அளவாக 60 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை தமிழக அரசு நிகழாண்டு வழங்கி உள்ளது என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2024-25 ஆம் கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் உள்ள மாணவா் தரவுகளை தொகுத்து கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் 25 சதவீதம் கூடுதலாக பயண அட்டைகள் வழங்கப்பட்டன. இது 2023-24 -இல 20.06 லட்சமாகவும், 2024-25 -இல் 25.01 லட்சமாகவும் இருந்தது.
நடப்பு கல்வியாண்டில் (2025-26) அனைத்து தகுதியான மற்றும் தேவையுள்ள மாணவ, மாணவிகளுக்கும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் எளிய முறையில் வழங்க போக்குவரத்துத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.
சுமாா் 60 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் பள்ளி மாணவ, மாணவா்களுக்கு நிகழாண்டு வழங்கப்பட்டுள்ளது.
தேவை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பயன்படுத்தி பள்ளிக்கு எளிதாக பயணம் செய்யும் வசதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை உருவாக்கியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

