கோவை: திருமணம் மீறிய உறவால் ஒருவர் கொலை!

கோவையில் மனைவியுடன் இருந்த கள்ளக் காதலனை வெட்டி படுகொலை செய்த கணவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை: திருமணம் மீறிய உறவால் ஒருவர் கொலை!
Published on
Updated on
1 min read

கோவையில் மனைவியுடன் இருந்த கள்ளக் காதலனை வெட்டி படுகொலை செய்த கணவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 45). இவரது மனைவி மதுரையை சேர்ந்த வாணிப்பிரியா (42). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த வாணி, தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவை பீளமேடு சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் பகுதியில் வசித்து வந்தார்.

அப்போது வாணிப்பிரியாவுக்கும் கோவையைச் சேர்ந்த மகேந்திரன் (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதை அடுத்து மகேந்திரன் அடிக்கடி வாணிப் பிரியா வீட்டிற்கு வந்து சென்று உள்ளார். இந்த தகவல் பிரபாகரனுக்கு தெரிய வந்து உள்ளது.

அதனை பிரபாகரன் கண்டித்தும் உள்ளார். ஆனால், கள்ளக் காதலைக் கைவிடாமல் மகேந்திரனுடன் வாணி தொடர்ந்து பழகி வந்தார். இந்த நிலையில் இன்று காலை வாணிப்பிரியா வீட்டிற்கு பிரபாகரன் வந்தார். அப்போது வீட்டில் மகேந்திரன் இருந்து உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டி உள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாணிப் பிரியா பிரபாகரனை தடுக்க வந்தார். பிரபாகரன் அவரையும் கழுத்தில் வெட்டினார். பின்னர் பிரபாகரன் வீட்டில் இருந்த தனது மகனை அழைத்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதில் மகேந்திரன் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வாணிப்பிரியா தனது நண்பருக்கு போன் செய்து தகவலைக் கூறி உள்ளார். அவர் இது குறித்து பீளமேடு காவல்துறையினருக்கு தெரிவித்து உள்ளார்.

சம்பவ இடத்துக்கு துணை ஆணையர் தேவநாதன், உதவி ஆணையர் வேல்முருகன், பீளமேடு காவல் ஆய்வாளர் கந்தசாமி ஆகியோர் விரைந்து வந்தனர்.

பின்னர், பலத்த காயம் அடைந்திருந்த வாணிப் பிரியாவை மீட்ட காவல்துறையினர், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மகேந்திரன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பிரபாகரனையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.